விருதுநகர்: விருதுநகர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 5.3 கிலோ தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விருதுநகர் அருகே சத்திரரெட்டியாபட்டி விலக்கில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் இந்துமதி தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 8 அட்டை பெட்டிகளில் தங்க நகைகள் இருந்தன. விசாரித்ததில், ஆர்டரின்பேரில் மதுரையில் உள்ள தங்க நகைக்கடைகளில் இருந்து சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 5.3 கிலோ தங்க நகைகளை, நாகர்கோவிலில் உள்ள நகைக்கடைகளுக்கு தனியார் கொரியர் சர்வீஸ் வாகனத்தில் கொண்டு சென்றது தெரியவந்தது. ஆனால் இவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. எனவே, நகைப்பெட்டிகளை கைப்பற்றிய பறக்கும் படையினர், விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
* ரூ.4.69 லட்சம் வெள்ளி சிக்கியது
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் நேற்று மாலை நெத்திமேடு ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீலநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து செவ்வாய்பேட்டை நோக்கி சென்ற தனியார் கொரியர் நிறுவனத்தின் வாகனத்தை நிறுத்தி, சோதனை செய்தனர். அதில், ரூ.4.69 லட்சம் மதிப்புள்ள 5.5 கிலோ எடையில் 3 வெள்ளிக்கட்டிகள் இருந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாததால் வெள்ளிக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.