சிம்லா: மண்டி தொகுதியில் பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நடிகை கங்கனா ரனவாத் நேற்று பிரசாரம் தொடங்கினார். பிரபல நடிகை கங்கனா ரனவாத் மக்களவை தேர்தலில் இமாச்சல் மாநிலம் மண்டி தொகுதியில் பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று அவர் மண்டி தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். மண்டியின் பாம்ப்லா நகரில் பிறந்தவர்தான் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது. சர்காகாட் நகரில் நடந்த தனது முதல் தேர்தல் பேரணியில், பிரதமர் மோடியை அவர் வெகுவாக புகழ்ந்தார். அதை தொடர்ந்து அவர் பேசும்போது,’ மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் உடனே நான் மும்பை சென்றுவிடுவேன் என்று கூறுகிறார்கள். நான் மண்டி தொகுதியில் தான் இருப்பேன். மக்களுக்கு சேவை செய்ய எனது சொந்த ஊருக்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். நான் எப்போதும் நீங்கள் அணுகும் வகையில் அருகிலேயே இருப்பேன். நான் உங்கள் மகள், உங்கள் சகோதரி, நீங்கள் என்னிடம் வருவதை யாராலும் தடுக்க முடியாது’ என்றார்.