திருவாடானை, மார்ச் 29: திருவாடானையில் சாலை பாதுகாப்பு கருதி, போலீசார் மீண்டும் பேரிகார்டுகளை அமைத்தனர். திருவாடானையில் அரசு கலைக் கல்லூரி முன்பாக தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. மேலும் கல்லூரி மாணவர்கள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இதனையடுத்து கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நல பணித்திட்ட முகாமில் திருவாடானை டிஎஸ்பி நிரேசிடம், கல்லூரி முன்பாக பேரிகார்டு அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து திருவாடானை போலீசார் உடனடியாக கல்லூரி முன்பாக உள்ள சாலையில் பேரிகார்டுகளை அமைத்தனர். இந்நிலையில் மர்ம நபர்கள் அந்த பேரிகார்டை அருகில் உள்ள கண்மாயில் தூக்கி எறிந்து விட்டனர்.
இதனையறிந்த போலீசார், தூக்கி வீசப்பட்ட பேரிகார்டை மீண்டும் அதே இடத்தில் அமைத்தனர். இது குறித்து டிஎஸ்பி நிரேஷ் கூறுகையில், இது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.