நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த போது ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த உரிமையும் இல்லாமல் அடிமைகளாய் நடத்தப்பட்டனர். உயர்சாதியினர் வகுத்த சட்டத்தால் நசுக்கப்பட்டனர். அவர்களது உரிமையை மீட்டெடுக்கவும் சமூகத்தில் புரையோடிப்போன தீண்டாமை, மூட நம்பிக்கை உள்ளிட்ட பல தீயசக்திகளை விரட்டியடிக்கவும் பகுத்தறிவு பாசறையில் பட்டை தீட்டப்பட்ட தலைவர்களான அம்பேத்கர் முதல் பெரியார், அண்ணா, கலைஞர் வரை சமூக நீதிக்காக போராடி அதை நிலைநிறுத்தி அந்த சமூகநீதியை பாதுகாத்து வந்தனர். ஆனால் ஒன்றியத்தில் ஆர்எஸ்எஸ் எனும் வலதுசாரி கோட்பாடுகளுடன் கூடிய பாஜ ஆட்சி அமைந்த பிறகு நாடு மீண்டும் சுதந்திரத்துக்கு முன்பு இருந்த நிலைக்கு சென்றுவிட்டது. கடந்த பத்தாண்டு பாஜ ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. வேலை இல்லா திண்டாட்டம் பெருகிவிட்டது. பட்டதாரி இளைஞர்களை பிரதமர் மோடி பஜ்ஜி, போண்டா சுட்டு விற்று பிழைக்கச்சொன்னார். இந்த கொடுமைகளையும் அவலங்களையும் எந்த மாநில முதல்வர்களும் எதிர்க்க துணியாத போது அஞ்சாத சிங்கமென மோடிக்கு எதிராக கர்ஜித்தவர் நமது தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. நாட்டுமக்களுக்காக இதுவரை எந்த உருப்படியான திட்டத்தையும் மோடி கொண்டுவரவே இல்லை.
உலக நாடுகளுடன் நட்புறவு என்று அடிக்கடி வெளிநாடு பயணம், மக்களை எப்போதும் பதற்றத்தில் வைக்க சீன எல்லை, பாகிஸ்தான் எல்லையில் போர் சூழல் என்று புளுகு மூட்டைகளை கட்டவிழ்த்து வந்தார். மத ரீதியான உணர்வுகளை மக்கள் மனதில் மேலோங்கச் செய்து அதில் பிரதமர் மோடியும், பாஜ கட்சியினரும் பலனடைந்தார்கள். அதனால் தான் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னார், ‘சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் ஆபத்தானது மோடி ஆட்சி என்று. மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை என்று கடுமையாக சாடினார். சமூக நீதி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு ஆட்சி தான் தற்போது ஒன்றியத்தில் நடந்து வருகிறது. கடந்த மக்களவை தேர்தலின் போது கருப்பு பணத்தை மீட்பேன் என்று சொன்ன மோடி நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது மட்டுமே மிச்சம். காஸ் விலை உயர்வு, பெட்ரோல் விலை, ஜிஎஸ்டி என்று எந்தப்பக்கம் திரும்பினாலும் மோடி ஆட்சியில் பாமர, ஏழை, எளிய மக்கள் கழுத்தை துன்பம், துயரம், கஷ்டம், நஷ்டம் என்ற பாசக்கயிறு கழுத்தை இறுக்கியது.
பாஜவையும், ஒன்றிய அரசையும் விமர்சிப்பவர்களையும், எதிர்ப்பவர்களையும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை ஏவி தொல்லை தருவது. கைது செய்வது என்ற அவலங்களை அரங்கேற்றியதை மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது மூலம் கண்கூடாக பார்க்கிறோம். இந்த காட்டாட்சி தர்பாரை ஒழிக்க மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி மிக பலமாக அமைந்துள்ளது. இதில் திமுக என்ற பெரிய மக்கள் சக்தியை கண்டு பிரதமர் மோடி மட்டுமின்றி பாஜ தலைவர்கள் அனைவரது கண்களிலும் தோல்வி பயம் குடிகொண்டுவிட்டது. பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்து திருக்குறளை ஒப்புவித்தாலும் தமிழக மக்கள் ஏமாறவேமாட்டார்கள். திராவிட பரம்பரை ரத்தம் தமிழக மக்களிடம் ஊறியுள்ளது. அதை எளிதில் பொய்களை வீசி விலைக்கு வாங்கவே முடியாது என்பதை மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான சமூக நீதி வெல்லும் போது பாஜ தலைவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.