1.தந்தையின் எம்எல்ஏ கோட்டாவை பயன்படுத்தி வந்தவர் கோவை அதிமுக வேட்பாளர். தகரப் பெட்டியுடன் கோவைக்கு வந்தவன் நான் என்று அண்ணாமலை கூறுகிறாரே?
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தனது அரசு பதவியை ராஜினாமா செய்து விட்டு முழுமையாக அந்த ஐபிஎஸ் பதவியை பயன்படுத்தாத ஒரு குற்றவாளியாகிறார். அப்படிப்பட்டவர் பொதுத் தேர்தலில் நின்று மக்களுக்காக பணியாற்றுவேன் என்று சொன்னால் அதை ஏப்படி ஏற்க முடியும், நம்ப முடியும். அன்று ஐபிஎஸ் பதவியில் செலக்ட் ஆகாமல் இருந்திருந்தால், இவருக்கு அடுத்த நிலையில் இருந்திருப்பவருக்கு அந்த பதவி கிடைத்திருக்கும். 30 ஆண்டு கால அரசு பதவியை தூக்கி எறிந்துவிட்டு, அடுத்தவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை இவர் கெடுத்து விட்டார் என்று தானே அர்த்தம். அந்த வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்தாமல் இருந்ததால் இந்த நாட்டுக்கும், அரசுக்கும், மக்களுக்கும் பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறார். இப்படிபட்டவர் மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்?. எனவே தகர பெட்டியாகவே அண்ணாமலை இருக்கட்டும். அதிமுக வேட்பாளர் தங்க பெட்டி தான்.
2.ஒரே மேடையில் சந்திக்க தயார் என்று கோவை அதிமுக வேட்பாளர் சவால் விட்ட நிலையில், சின்ன பசங்க விளையாட்டுக்கு எல்லாம் நான் வர முடியாது என்று அண்ணாமலை நழுவுவது ஏன்?
வளர்ச்சி என்பது பொதுவாக சமச்சீராகத் தான் இருக்க வேண்டும். ஒரு கால் வளர்ந்து, கை வீங்கி இருந்தால் அதுக்கு பெயர் வீக்கம். உடலும், கையும், காலும் ஒட்டுமொத்த உறுப்புகளாக ஒரே சமச்சீராக இருந்தால் தான் அதற்கு பெயர் வளர்ச்சி. அப்படி வளர்ச்சி அடைந்தவர் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன். அண்ணாமலை திடீரென வந்தவர். இவர் வீக்கம். படிப்படியாக வளர்ச்சி அடைந்தவர்களுக்கும், திடீரென ஒரே நாளில் பாஜகவுக்கு வந்து தலைவரானதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இவர் வீக்கம், அதிமுக வேட்பாளர் தான் உண்மையான வளர்ச்சி.
3 அனைத்து கட்சியினரும் ‘அண்ணாமலை’ புராணம் பாடுவதால் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என அண்ணாமலை தம்பட்டம் அடிக்கிறாரே?
அண்ணாமலையை கிரிவலம் சென்று வேண்டுவது பக்தி. இவரோ மோடியை சுத்தி கிரிவலம் வருகிறார். மதவாதத்தை கையிலெடுத்து வருகிறார். மனிதநேயத்தை இவர் கையிலெடுத்தால் இவர் புராணம் பாடலாம். ஆனால் மதவாதத்தை கையிலெடுத்த அண்ணாமலையை எப்படி மக்கள் ஏற்பார்கள். எனவே அண்ணாமலை புராணம் பாடுகிற அளவுக்கு தமிழகத்தில் இவர் தேவதூதனும் அல்ல, தேவலோகத்தில் இருந்து வந்தவரும் அல்ல.
4 கோவை தொகுதியில் 60 சதவீத வாக்குகள் எனக்கு தான் என அண்ணாமலை பேசி வருகிறாரே?
அதிமுகவின் கோட்டை கோவை. இந்த கோட்டைக்குள் அண்ணாமலை போன்றவர்கள் ஊடுருவி ஓட்டை போட முடியாது. அண்ணாமலையோ தனக்கு 60 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று அதீத கற்பனையில் இருக்கிறார். தூக்கத்தில் வருவது தான் கனவு, அதற்காக அதிகம் தூங்கி விடக்கூடாது. இதனால் அண்ணாமலை தூக்கத்தில் இருந்து முதலில் எழுந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.