* கல் உப்பு ஜாடியில் கொஞ்சம் பச்சரியை தூவினால் உப்பு ஈரமாகி கசியாது, மேஜை மேல் வைக்கும் சால்ட்டிலும் சிறிது பச்சரிசியைப் போட்டு வைக்கலாம். உப்பு ஈரம் கசியாமல் துளைகள் வழியாக சுலபமாக கொட்டும்.
* சீடை போன்ற எந்த பட்சணம் செய்தாலும் உப்பை நேரடியாக போடாமல் சிறிது நீரில் கரைத்து, தெளிந்த உப்பு நீரை ஊற்றிப் பிசைந்தால் பட்சணங்கள் வெடிக்காது.
* பாசிப்பருப்பை வறுத்தபின் வேக வைத்தால் வெண்பொங்கலின் மணம் தூக்கலாக இருக்கும்.
* புளித்த மோரை குக்கரில் ஊற்றி மூடி வைத்துவிட்டு காலையில் எடுத்து துலக்கினால், குக்கர் பளிச்சென மின்னும்.
* தக்காளி சூப்பில் போட பிரெட் துண்டு இல்லையெனில் ஐவ்வரிசி வடாம் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
* வேப்பிலையைக் கசக்கி டைனிங் டேபிளில் வைத்துவிட்டால் ஈக்கள் நெருங்காது.
* சேனைக்கிழங்கை புளிநீரில் வேகவைத்தால் சாப்பிடும்போது நாக்கு அரிக்காமல் இருக்கும்.
* கேக் வேகவைக்கும்போது அதன்மேல் ஒரு பிரவுன் பேப்பர் போட்டு மூடினால் வெந்தபின் கேக்கின் மேல் ஆடை படியாமல் இருக்கும்.
* ஊறுகாய் தயாரிக்கும்போது கடுகுக்குப் பதில், சிறிது சோம்பு தாளித்து கொட்டினால் சுவையாக இருக்கும்.
* வடைக்கு அரைக்கும்போது மிக்ஸியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு அதன்மேல் உளுந்தம்பருப்பைப் போட்டு அரைத்தால் அரைத்த மாவை மிக்ஸியிலிருந்து எளிதாக வழித்தெடுக்கலாம். பிறகு மிக்ஸியை கழுவுவதும் சுலபம்.
* டீ, காபி போன்ற சூடான பானத்தை கண்ணாடி டம்ளரில் ஊற்றுவதற்கு முன்பு ஒரு ஸ்பூனைப் போட்டால் டம்ளரில் சூடு அதிகம் ஏறாமல் ஸ்பூன் சூட்டை இழுத்துக் கொள்ளும்.
* தேங்காய் எண்ணெயில் சுத்தமான கல் உப்பை சிறிது போட்டு வைத்தால் நாள்பட கெடாமலிருக்கும்.
* மஞ்சள் கிழங்குகளை உலர்த்தி ஈரமில்லாத பாட்டிலில், ஒரு துண்டு கட்டி கற்பூரத்துடன் போட்டு இறுக மூடி வைத்தால் உளுத்துப்போகாது.
* வெண்ணெய் பாக்கெட்டை இரவு நீர் நிரப்பிய பாத்திரத்தில் போட்டு காலையில் எடுத்து பிரித்தால் வெண்ணெய் ஒட்டாமல் வரும்.
* அப்பளத்தின் இருபுறமும் லேசாக எண்ணெய் தடவி தணலில் சுட்டால் பொரித்தது போலவே இருக்கும்.- மல்லிகா அன்பழகன்.
* முட்டை வேக வைக்கும்போது தண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி வேகவிட்டால் விரிசல்விடாது. திரவமும் வெளிவராது.
* பயத்தம் பருப்பு சுண்டல் செய்யும்போது பருப்பை வாசனை வரும்படி வறுத்துவிட்டு செய்தால் சுண்டல் உதிரியாக வரும்.
* கலந்த சாதம், வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது குக்கர் மூடியைத் திறந்ததுமே சிறிது எலுமிச்சைச் சாறை விட்டுக் கிளறினால் உதிரி உதிரியாக இருக்கும்.
* பக்கோடா செய்யும்போது வேர்க்கடலையை பொடிசெய்து கடலைமாவில் கலந்து செய்தால் மொறு மொறுவென ருசியாக இருக்கும்.
* சிறிது வெல்லத்தையும், சிறிது இஞ்சியையும் சேர்த்து அரைத்து பக்கோடா மாவில் கலந்துசெய்தால் வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும்.
– எம். வசந்தா.