Sunday, October 6, 2024
Home » பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா கோலாகலம்: லட்சம் பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா கோலாகலம்: லட்சம் பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு

by MuthuKumar

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயிலில் இன்று காலை துவங்கிய குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை வரை பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

இவ்வாண்டு திருவிழா கடந்த மார்ச் 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி பண்ணாரி அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா தினமும் நடைபெற்றது. கடந்த மார்ச் 20ம் தேதி அதிகாலை கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் இரவில் அம்மன் புகழ்பாடி கம்பம் சுற்றி நடனம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று இரவு குண்டத்தில் வேம்பு, ஊஞ்ச மர விறகுகளுக்கு சிறப்பு பூஜை செய்து தீயிடப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு தெப்பக்குளத்திலிருந்து மேளதாளம் முழங்க படைக்கலத்துடன் அம்மன் அழைத்து வரப்பட்டு வரம் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 3.40 மணிக்கு படைக்கலம் கோயிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து கோயில் முன் தயார் செய்யப்பட்ட குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலர்பந்து உருட்டுதல் நிகழ்ச்சி நடந்ததை தொடர்ந்து திருக்குண்டம் திறக்கப்பட்டது.

அதிகாலை 3.50 மணிக்கு திருக்குண்டம் முன்பு சிறப்பு பூஜை செய்து பூசாரி பார்த்திபன் பய பக்தியுடன் குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து பரம்பரை அறங்காவலர்கள் கோயில் பணியாளர்கள் குண்டம் இறங்கினர். பின்னர் வரிசையில் காத்திருந்த பெண், சிறுவர், சிறுமியர், முதியவர்கள், விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோயிலுக்குள் சென்று பண்ணாரி அம்மனை தரிசித்தனர். திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீணை அலங்காரத்தில் அருள் பாலித்தார்.இன்று மாலை 4 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் தீ மிதிக்க அனுமதிக்கப்படுவர். அதனை தொடர்ந்து கால்நடைகளோடு விவசாயிகள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். இன்று மாலை வரை ஒன்றரை லட்சம் பக்தர்கள் குண்டம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

குண்டம் இறங்கிய விஐபிக்கள்
தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா ஆண்டுதோறும் நடைபெறும் பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற குண்டம் திருவிழாவில் உள்துறை செயலாளர் அமுதா குண்டம் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை ஐஜி முருகன், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி உள்பட பல விஐபிக்களும் குண்டம் இறங்கினர்.

You may also like

Leave a Comment

4 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi