கொல்கத்தா: சந்தேஷ்காலி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரேகா பத்ராவுக்கு பாஜ தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெண்களுக்கு எதிராக பாலியல் அட்டூழியங்கள் செய்ததாகவும், அவர்களின் நிலங்களை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையே, சந்தேஷ்காலி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரான ரேகா பத்ராவுக்கு பாசிர்ஹத் மக்களவை தொகுதியில் போட்டியிட பாஜ சீட் கொடுத்துள்ளது. ரேகா இன்னும் அதிகாரப்பூர்வமாக பாஜவில் சேராத நிலையில் அவருக்கு சீட் தரப்பட்டுள்ளது. இத்தொகுதியின் கீழ் தான் சந்தேஷ்காலி பகுதி வருகிறது. இந்நிலையில், சந்தேஷ்காலி பகுதியில் நேற்று ரேகாவுக்கு எதிராக கையால் எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘ரேகாவை பாஜ நாங்கள் வேட்பாளராக விரும்பவில்லை’ என வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இது திரிணாமுல் காங்கிரசின் வேலை என பாஜ குற்றம்சாட்டி உள்ளது. இதை திரிணாமுல் மறுத்துள்ளது.