காசா: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் காசாவில் 84 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே கடந்த சில மாதங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில், அல் நாசர் மற்றும் அல் அமல் மருத்துவமனைகள் மீது நேற்று இஸ்ரேல் படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. ரஃபாவில் ஐந்து குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 84 பேர் பலியாகினர். இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,226 ஆக உள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 74,518 ஆக அதிகரித்துள்ளது. உணவிற்காக வாடும் காசா மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கப்பட வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.