கொல்கத்தா: மக்களவை தேர்தலுக்கு பின் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்போம் என்று பாஜ மிரட்டியுள்ளது. மேற்குவங்கத்தில் 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மேற்குவங்க பாஜ தலைவர் சுகந்தா மஜூம்தார், “மக்களவை தேர்தலில் திரிணாமுல் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் முடிவு செய்து விட்டனர். 35 இடங்களை வெல்ல பாஜ திட்டமிட்டுள்ளது. தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை விட பாஜ கூடுதலாக ஒரு இடம் வென்றால் கூட, 2026ம் ஆண்டு வரை திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நீடிக்காது. மம்தா ஆட்சியை கவிழ்ப்போம். சந்தேஷ்காலியில் நடந்த சம்பவங்கள் திரிணாமுல் ஆட்சிக்கு பின்னடைவாக இருக்கும்.” என்று இவ்வாறு தெரிவித்தார்.