விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டையில், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுரு மற்றும் விழுப்புரம் அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் ஆகியோரின் அறிமுக கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்பி பேசியதாவது: பாமக தலைவர் அன்புமணிக்கு இட ஒதுக்கீடு பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது. 10.5 சதவீத இடஒதுக்கீடு பற்றி எப்போது, யாரிடம் அவர் பேசி உள்ளார். அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து நடிக்கின்றனர். இவர்களுக்கு நாடகம் நடிக்க தான் தெரியும். அநாவசியமாக பேசினால் நானும் பேசுவேன். பல உண்மைகளை பேசுவேன். இட ஒதுக்கீடு பற்றி பேசினால் உங்களுக்கு மிகப்பெரிய அசிங்கம் ஏற்படும். 10.5 சதவீத இட ஒதுக்கீடு, நீங்கள் கூறுவது போல் அமல்படுத்த முடியாது என நான் கூறினேன். நீதிமன்றம் சென்றால் ரத்தாகும் என்றும் கூறினேன், அது பற்றி கவலை இல்லை நீங்கள் அறிவியுங்கள் என கூறியவர் தான் இவர்கள். உண்மையில் அந்த சமுதாய மக்களுக்கு 10.5 சதவீதம் வரவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு துளியும் கிடையாது.
ரொம்ப பேசினால் நானும் ரொம்ப பேசுவேன், கூச்சலுக்கும், மிரட்டலுக்கும் பயப்படுபவன் அதிமுககாரன் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியை எப்போதெல்லாம் எதிர்த்து நின்றோமோ அப்போதெல்லாம் நாங்கள் வெற்றி பெற்று உள்ளோம். உங்கள் தயவால் நாங்கள் எப்போதும் ஜெயித்தது இல்லை. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என இப்போது வரை துரோகிகள் முயற்சி செய்து வருகின்றனர். இட ஒதுக்கீடு பற்றி பேசும் அன்புமணி, நீ சேர்ந்து இருக்கிற பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் எனக் கூறியுள்ளனர். இப்போது அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு யாரை ஏமாற்ற பார்க்கிறாய், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்ற கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, சமுதாய மக்களை ஏமாற்ற வேண்டாம். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அதிமுக மிகப்பெரிய வெற்றியை அடைய உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.