சிவகங்கை, மார்ச் 24: மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் ரூ.10ஆயிரத்திற்கு மேல் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சிவகங்கை அருகே மேலவாணியங்குடியில், மானாமதுரை பைபாஸ் சாலையில் தாசில்தார் மைலாவதி தலைமையிலான மக்களவை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 36 சாக்கு மூடையில் 1,776 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த சிவகங்கை அண்ணாமலை நகரை சேர்ந்த லோகேஷை கைது செய்ததுடன், அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி சிவகங்கை நுகர்பொருள் வானிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.