நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜ கட்சியின் சார்பாக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். பிரசாரத்தில் ஈடுபட நேற்று முன்தினம் இரவு கோவைக்கு வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்: கோவை நாடாளுமன்ற தொகுதியில் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கமாட்டேன். பாஜ கட்சியும் செலவு செய்யாது. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் இருக்கும்,’என்று கூறினார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி தந்து உள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில், சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பதிலளிக்கையில், ‘ஊடகம், பத்திரிகை நண்பர்கள் எல்லாம் போய் பிடிங்க. பின்னாடியே போய் பாருங்க.
அவர் ஒரு ரூபாய் செலவு பன்றாரா இல்லையானு. ஒரு ரூபாய் செலவு பன்னலனா ஒரு டீ கூட குடிக்க முடியாது. குடி தண்ணீர் கூட ஒரு பாட்டில் 12 ரூபாய். அவங்க எல்லாம் பெரிய அளுங்க பிஸ்லெரி வாட்டர் தான் குடிப்பாங்க. அதுக்கே 12 ரூபாய் தேவைப்படும். அதுலாம் ஒரு பத்திரிகை செய்திக்கு வரகூடியது. தேர்தலில் அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு அரசியல் கட்சிகள் செலவு செய்யலாம். இன்றைக்கு தேர்தல் ஆணையமே சொல்லி இருக்கே தேர்தலுக்கு இவ்வளவு செலவு செய்யனும்.
அதனால் அவங்க அவங்க தேவைக்கு ஏத்தவாறு செலவு செய்வாங்க. ஒரு ரூபாய் செலவு செய்ய மாட்டேனு சொல்றது தவறானது. கார்ல போறோம் அதுக்கு டீசல் அடிக்கனும்லா. அதுக்கு செலவு செய்யனும்லா. அதுல என்ன தண்ணீல போக முடியுமா. பரபரபான செய்தி பத்திரிகை ஊடகத்துல வரனும் சொல்றது. இப்போம் பாருங்க நீங்க கூட கேக்கீங்கலா. அவரு சொல்றனாலதான நீங்க கேக்கீங்க. இப்படி பரபரபான செய்திக்கு தான் அது உதவும்,’என்றார்.
பாஜவுடன் கூட்டணியில் இருந்தபோதும் சரி, வெளியே வந்த போதும் சரி எடப்பாடியை கடுமையாக அண்ணாமலை விமர்சித்தும் எடப்பாடி நேரடியாக பதிலடி கொடுக்கவில்லை. சமீபத்தில் குஜராத்தில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து எடப்பாடி கூறிய கருத்துக்கு, அவரு ஒரு அரவைவேக்காடு என விமர்சித்து இருந்தார் அண்ணாமலை. இதற்கு செல்லூர் ராஜூ பதிலடி தந்தார். இந்நிலையில், அண்ணாமலைக்கு இதுவரை நேரடியாக பதிலளிக்காத எடப்பாடி முதல்முறையாக பதிலடி கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.