தமிழகத்தில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் நேற்று முன்தினமும், நேற்றும் அறிவிக்கப்பட்டது. நேற்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் நெல்லை தொகுதிக்கு சென்னையைச் சேர்ந்த வக்கீல் சிம்லா முத்துச்சோழனை அறிவித்துள்ளது. இவருக்கு தற்போது கடும் எதிர்ப்புகள் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து நெல்லை தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘2016ம் ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டு 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அப்படி ஜெயலலிதாவுக்கு எதிராகவும், அவரைப் பற்றி கடுமையான விமர்சனம் செய்த சிம்லாவை, முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, அழைத்து வந்து கட்சியில் சேர்த்துள்ளார்.
கட்சியில் சேர்ந்து ஒரு வாரத்துக்குள் அவரை வேட்பாளராக கட்சி அறிவித்துள்ளது. நெல்லை தொகுதி கேட்டு 79 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், மகளிர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் என பல பொறுப்புகளில் இருந்தவர்கள் விருப்ப மனு கொடுத்தனர். ஆனால் அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, கட்சிக்காக உழைத்தவர்களை ஓரங்கட்டி விட்டு இன்று நெல்லைக்கே சம்பந்தம் இல்லாத சென்னையைச் சேர்ந்தவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இசக்கி சுப்பையா சொன்னதற்காக கட்சியை அடகு வைப்பதா?.
அவர் முன்னாள் அமைச்சரின் மருமகள். நெல்லையைப் பொறுத்தவரை கிறிஸ்தவ அல்லது இந்து நாடார் வகுப்பைச் சேர்ந்தவருக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஓட்டுக்களை பெற முடியும். ஆனால், சிம்லாவின் மாமியார்தான் நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். சிம்லா வேறு வகுப்பைச் சேர்ந்தவர். அவரை எப்படி நெல்லை தொகுதி வேட்பாளராக அறிவிக்க முடியும். மேலும், இசக்கி சுப்பையா, நயினார் நாகேந்திரனுடன் சேர்ந்து கொண்டு, அவருக்கு அதிக ஓட்டுக்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, வெளியூரில் இருந்து ஆட்களை இறக்கியுள்ளனர். நயினார், இசக்கி சுப்பையாவின் கூட்டுச் சதியை அதிமுக நிர்வாகிகள் உடைத்தெறிவார்கள். இதனால் வேட்பாளரை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், படுதோல்வி அடைவது உறுதி என்று தெரிவிக்கின்றனர்.
* 8 ஆண்டுகளில் 4 கட்சி தாவியவர்: மதுரை வேட்பாளர்
மதுரை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் சரவணன் 8 ஆண்டுகளில் நான்கு கட்சிகளில் பயணம் செய்துள்ளார். தற்போது அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். 2015ம் ஆண்டு மதிமுகவில் மாவட்டச் செயலாளராகச் செயல்பட்ட பி.சரவணன் 2016ல் திமுகவில் இணைந்தார். 2019ல் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார். தொடர்ந்து சீட் கிடைக்காததால் 2021ல் பாஜகவில் இணைந்தார். இணைந்த சில மணி நேரங்களிலேயே அவர் பாஜக சார்பில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் திமுகவின் கோ.தளபதியிடம் தோல்வியடைந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லெட்சுமணனின் உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசி பாஜவின் பராக்கிரமத்தை நிரூபித்தவர். செருப்பு வீச்சைத் தொடர்ந்து அன்றைக்கு நள்ளிரவே பழனிவேல் தியாகராஜனைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டார். பின்னர் அவர் பாஜகவிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். சிறிது காலம் அரசியலுக்கு ‘ஓய்வு’ விட்டிருந்த அவர், தேர்தல் நெருங்கி யதையொட்டி திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார். இப்போது அதிமுகவில் சீட் வாங்கி நிற்கிறார்.
* ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஏர்போர்ட் அமைப்பேன்: சிரிப்பு காட்டும் அதிமுக வேட்பாளர்
நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கர் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. இதில் சுர்ஜித்சங்கர் பேசுகையில், ‘விவசாயிகளும், மீனவர்களும் எனது இரண்டு கண்கள். அவர்களின் நலனுக்காக பாடுபடுவேன். நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்தால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படும். ஏன் இதை விட தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியே சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும்,’என்றார்.
இவரது பேச்சை கேட்ட அதிமுக கூட்டணி கட்சியினர், ‘ஒவ்வொரு விமானநிலையத்திற்கும் குறைந்தது 200 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது ஒவ்வொரு மாவட்டத்திற்கு எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் நாகப்பட்டினத்தில் பசுமைத் துறைமுகம் கட்டப்படும் என அறிவித்தார். ஆனால் இன்றுவரை அது அறிவிப்பாகவே உள்ளது. அப்படி இருக்கும் போது நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு விமான நிலையமா? இதைகூட ஏற்றுகொள்ளலாம் ஆனால் மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம் அமைப்பேன் என கூறுவது எப்படி ஏற்று கொள்ள முடியும். வாக்காளர்கள் ஏமாளிகளாக இருந்தால் எதை கூறியும் ஏமாற்றி விடலாம் என நினைக்க கூடாது,’என்று கிண்டலடித்தனர்.