அண்ணாநகர்: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கிய அதிமுக மாஜி அமைச்சர் பெஞ்சமின் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நெற்குன்றம் மீனாட்சி அம்மன் நகர் பகுதியில் நேற்று, அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அதிமுக கொடியை ஏற்றிவைத்து 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்கினார்.
இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நடந்ததால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரித்தனர். இதுசம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் குமார் கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். இந்தநிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் இதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கமலக்கண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.