சிவகாசி/திருச்சுழி: தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளது. எனவே விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சிவகாசி மாநகராட்சியில் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் அரசியல் கட்சி கொடி கம்பம், பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.
சிவகாசி பஸ் ஸ்டாண்ட், சிவகாசி மேலரதவீதி, பை பாஸ், வெம்பக்கோட்டை முக்கு, காரனேசன் பஸ் ஸ்டாப் உட்பட பல்வேறு பகுதிகளில் அரசு பொதுச் சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சித் தலைவரின் படங்கள், கட்சி சின்னங்கள், கொடிகள் போன்றவை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகினறனர். மேலும் மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள், வார்டு பகுதியில் உள்ள கல்வெட்டுக்கள் மற்றும் கட்சி கொடிகள், கொடிக்கம்பங்கள் அகற்றி வருகின்றனர். கொடி கம்பங்கள், வால்போஸ்டர்கள், பேனர்கள் அகற்றும் பணிகளை மாநகர திட்டமிடுனர் மதியழகன், மாநகர ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் நேரில் ஆய்வு செய்தனர். சிவகாசி மாநகராட்சியில் நேற்று மட்டும் 20க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றியதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
திருத்தங்கல் மண்டல பகுதியில் வால்போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்ட நிலையில் கொடி கம்பங்கள் இன்று அகற்றப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் திருச்சுழி, நரிக்குடி பகுதியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சியினரின் சுவரொட்டி விளம்பரங்கள், கட்சி கொடிக்கம்பங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் வரையப்பட்டுள்ள அரசு சுவர் விளம்பரங்கள் தீவிரமாக அழிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள், ஊராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.