சென்னை: தாய்ப்பாலூட்டும் இளம்பெண் ஒருவருக்கு மார்பக திசு மாற்று அறுவை சிகிச்சை செய்து, காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு இளம்பெண் ஒருவர் மார்பகத்தில் வலி, வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகிய சிக்கல்கள் தீவிரமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வந்தார். இப்பெண்ணுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரின் உடனடி பரிசோதனையும், சிகிச்சை நடவடிக்கையும் அவசியமாக இருந்தது.
மருத்துவ நிபுணரின் பரிசோதனையில், மார்பக திசு சேதத்தின் தீவிரத்தன்மை தெளிவாக உணரப்பட்டது; பாதிக்கப்பட்ட பகுதிகளை வெட்டி அகற்றுவதற்கு அவசர அறுவை சிகிச்சை அவசியம் என கருதப்பட்டது. பிளாஸ்டிக் மற்றும் மறுகட்டமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் அருள்மொழி மங்கை மற்றும் சதீஷ் மணிவேல் ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள் குழு மார்பக திசு சேதத்தை சரிசெய்து, மறுகட்டமைப்பு செய்வதற்கான அப்பெண்ணின் முதுகிலிருந்து எடுக்கப்பட்ட சொந்த திசுவே பயன்படுத்த திட்டமிட்டனர்.
பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அறுவைசிகிச்சை நிபுணர் அருள்மொழி மங்கை கூறியதாவது: காய்ச்சல், வலி, மார்பகத்தில் சிவத்தல் மற்றும் வீக்கம் போன்ற தொற்று அறிகுறிகளுடன் மார்பகத்தில் காணப்படும் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் விரைவிலேயே கண்டறியப்பட்டது.
அதிக சக்தி வாய்ந்த நோய்க்கிருமி பாதிப்பை சுட்டிக்காட்டும் அறிகுறியாக இருக்கக்கூடும் என்று சேதமடைந்த திசுவை அகற்றுவதற்கு அவசரமாக அறுவை சிகிச்சை செயல்முறை மேற்கொள்ள வேண்டும் என்ற தேவை இருந்தது. மேலும் மேலதிக சிக்கல்கள் வராமல் தவிர்க்க சரியான ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை பயன்படுத்துவதன் அவசியமாக இருந்தது. மார்பகத்தில் இத்தகைய நச்சுயிரி பாதிப்பு, அதுவும் ஆரோக்கியமாக தாய்ப்பாலூட்டி வந்த ஒரு பெண்ணில் காணப்படுவது மிக அரிதான நிகழ்வாகும். இவ்வாறு அவர் கூறினார்.