செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே வீட்டின் சமையலறைக்குள் புகுந்த 7 அடி நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே கீழக்கரணை பகுதியில் வசிப்பவர்கள் வசந்த்-அன்னை தெரசா தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் உணவு செய்வதற்காக அன்னை தெரசா சமையல் அறைக்குள் சென்றுள்ளார். அப்போது, உஷ்… உஷ்… என சத்தம் வந்துள்ளது.
இதனால், சுதாரித்துக் கொண்ட அன்னை தெரசா, அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என பார்த்துள்ளார். அப்போது, காஸ் அடுப்புக்கு அடியில் இருந்து அந்த சத்தம் வருகிறது என அவருக்கு தெரிய வந்தது. அங்கு பார்த்தபோது, அடுப்புக்கு அடியில் சுமார் 7 அடி நீளம்முள்ள நல்ல பாம்பு இருப்பதை கண்டு அன்னை தெரசா அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து, அலறியடித்து கொண்டு அன்னை தெரசா வெளியே ஓடி வந்தார். பின்பு, மறைமலைநகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெற்றி தலைமையிலான தீயணைப்பு குழுவினர் நீண்ட நேரம் போராடி 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், அந்த நல்ல பாம்பை அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். வீட்டு சமையல் அறைக்குள் நல்ல பாம்பு புகுந்த இந்த சம்பவம் மறைமலைநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.