மும்பை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமின்றி மோடியால் ஜெயிக்க முடியாது என ராகுல் காந்தி பேசினார். மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஒரு முகமூடிதான். அவருக்கு 56 அங்குல மார்பு இருக்கிறது என்கின்றனர். ஆனால், அவர் வெறும் கூடுதான். உண்மையில், அரசரின் ஆன்மாவானது மின்னணு வாக்கு இயந்திரத்தில்தான் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இல்லாமல் மோடியால் ஜெயிக்க முடியாது.
அமலாக்கத்துறையின் மீதும் பிற ஒன்றிய புலனாய்வு அமைப்புகளின் மீதும் உள்ள பயத்தில்தால் பலர் பாஜவுக்கு செல்கின்றனர். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட நாட்டின் முக்கிய தகவல் தொடர்பு அமைப்பு நாட்டின் கைகளில் இல்லை. இதனால்தான் நாங்கள் இந்த யாத்திரையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. வேலையில்லா திண்டாட்டம், வன்முறை, பணவீக்கம், விவசாயிகள் பிரச்னை போன்ற பொதுமக்கள் கவலைப்படும் விஷயங்கள் எதுவும் வெளிக்காட்டப்படுவதில்லை. நாட்டின் கவனத்தை ஈர்க்க, நாங்கள் 4,000 கி.மீ நடக்க வேண்டியிருந்தது. இவ்வாறு ராகுல் கூறினார்.
* வெறுப்பு சித்தாந்தத்துக்கு எதிரான போராட்டம்
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: நாட்டின் பன்முகத்தன்மையையும் சகோதரத்துவத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மோடி ஒரு உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர் மற்றும் பொய்களை பரப்புபவர். ஆனால் எங்களைப் போன்ற உண்மையுள்ளவர்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டார்கள்.
மகாராஷ்டிராவில், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கட்சி மாறுகிறார்கள். ஆனால் பீகாரில் அவர்கள் (பாஜ) எனது சாச்சாவை (நிதிஷ்குமார்) கடத்திச் சென்றனர். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ உதவியுடன் அரசுகள் கவிழ்க்கப்படுகின்றன. இந்தியா கூட்டணியின் போராட்டம் மோடிக்கு தனிப்பட்ட முறையில் எதிரானது அல்ல, வெறுப்பு சித்தாந்தத்திற்கு எதிரானது என்றார்.