பாட்னா: பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி நேற்று மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்னர் பாட்னாவில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பீகாரில் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான அலை வீசுகிறது. வரும் தேர்தலில் மெகா கூட்டணிக்கு ஆதரவான முடிவுகள் கிடைக்கும்.
பீகாரில் 17 மாதங்கள் நடந்த மெகா கூட்டணி அரசின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களையும் பாஜ,ஐக்கிய ஜனதா தளத்தின் 17 ஆண்டு ஆட்சியில் செய்த திட்டங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 17 ஆண்டுகளில் செய்ய முடியாததை மெகா கூட்டணி அரசு 17 மாதங்களில் செய்து முடித்துள்ளது என்பதை மக்கள் அறிவார்கள்.
எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை மக்கள் அங்கீகரித்துள்ளனர். அந்த ஆட்சியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்ய முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக கடுமையான அதிருப்தி நிலவுகிறது. இதனால் மெகா கூட்டணிக்கு தேர்தலில் மிக பெரிய வெற்றி கிடைக்கும்’’ என்றார்.