சென்னை: தேர்தல் ஆணையக் கோட்பாடுகளுக்கு உட்பட்டு தே.ஜ. கூட்டணி கட்சியினருடன் இணைந்து பணியாற்றும்படி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தேதியின் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நியாயமானதாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தமாகாவைப் பொறுத்த மட்டில் தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக எதிர்கொள்ளும். தே.ஜ கூட்டணியில் அங்கம் வகித்துள்ள தமாகா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடும். நாடு முழுவதற்குமான தேர்தல் என்பதால் வாக்களிக்கும் தகுதி உள்ளவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும் என்பதற்கு ஏதுவாக விழிப்புணர்வுடன் தேர்தல் நடைபெற வேண்டும் என தமாகா எதிர்பார்க்கிறது.
தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக, மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.