சென்னை: ஐதராபாத்தில் இருந்து ஆவடிக்கு கடத்தி வந்த 15,000 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஆவடி அடுத்த கோவில்பதாகை ஜெகஜீவன் ராம் சிலை பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆவடியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற மாநகரப் பேருந்தை (தடம் எண் 61ஆர்) நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த 3 பேர் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் ஒன்றை மட்டும் விட்டுவிட்டு தப்பித்து சென்றனர். தேர்தல் பறக்கும் படையினர் அந்த கைப்பையை சோதனை செய்தபோது அதில் 15,000 நைட்ரோ விட் எனும் போதை மாத்திரை இருந்தது. அங்கிருந்து தப்பிச் சென்றவர்கள் குறித்து அப்பகுதி மக்கள் ரோந்து பணியில் இருந்த ஆவடி டேங்க் பேக்டரி தலைமை காவலர்கள் மகேந்திரன் மற்றும் விஜயகுமாரிடம் தெரிவித்தனர்.
அதே பகுதியில் முள் புதருக்குள் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், முகப்பேர் பகுதியை சேர்ந்த தினேஷ் (24) மற்றும் (17)வயதுடைய சிறுவன் என தெரியவந்தது. மேலும், ஒருவர் தலைமறைவாகி உள்ளதும் அவரிடமும் போதை மாத்திரைகள் உள்ள பை உள்ளதும் தெரிய வந்ததுள்ளது. இவர்கள் ஐதராபாத்திலிருந்து போதை மாத்திரைகளை மொத்த விலையில் வாங்கி, சென்னை சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்வது தெரியவந்தது.