தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம் வேடம் ஏற்று நடித்து வரும் மன்சூர் அலிகான் சமீபத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற கட்சியை தொடங்கினார். அதன் தலைவராக செயல்பட்டு வந்த மன்சூர் அலிகான் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேலூர் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை வளசரவாக்கத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது.
அதில், நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்குதல், அக்கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது, இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம், அவரை சாதாரண உறுப்பினராக தொடர அனுமதித்தல் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்த மன்சூர் அலிகானை அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மன்சூர் அலிகான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற இயக்கத்துக்கு பொதுச்செயலாளராக குன்றத்தூர் பாலமுருகன்தான் இருக்கிறார். கண்ணதாசன் என்பவர், மூத்த சங்க உறுப்பினர் செல்லப்பாண்டியனால் ஆபீஸ் பாய் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். சமீபத்தில் அலுவலக ரப்பர் ஸ்டாம்ப், ரூ70 ஆயிரம் மதிப்புள்ள புதிய லேப்டாப்பை திருடிச் சென்றுவிட்டார். அவர் சேர்த்த உறுப்பினர்களை விடுவித்து, புதிய உறுப்பினர்களைக் கொண்டு மீள்மனு செய்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் வாங்கிவிட்டோம். எனவே, அவரைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். எனவே, உறுப்பினர்கள் யாரும் அவர்மீது கோபம் கொள்ள வேண்டாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.