செய்யூர்: இசிஆர் சாலையில் கழிவறைகளுடன் கூடிய புதிய பயணியர் நிழற்குடைகள் கட்டுமான பணிகள் நடந்துவரும் நிலையில், கட்டிட சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டி அசுத்தம் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் இசிஆர் எல்லையம்மன் கோயில் பகுதியை இணைக்கும் விதமாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
ரூ.603 கோடி மதிப்பீட்டில் 109 கிலோ மீட்டர் வரை இந்த நான்கு வழி இணைப்பு சாலை பணி நடந்து வருகிறது. சாலை விரிவாக்க பணிக்காக ஏற்கனவே பல பகுதிகளில் இருந்த பழைய பயணிகள் நிழற்குடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, புதிதாக கழிவறைகளுடன் கூடிய கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கழிப்பறை பணிகள் முடிப்பதற்கு முன்பே ஒருசிலர் கட்சி, இறப்பு, பிறந்தநாள் சம்பந்தமான பல்வேறு போஸ்டர்களை பயணிகள் நிழற்குடை சுவர்களில் ஒட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். கட்டிடத்தின் மேல் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என நெடுஞ்சாலை துறையினர் அறிவிப்பு வாசகம் எழுதிய இடத்திலும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.