தமிழ்நாட்டுக்கு கடந்த இரண்டரை மாதங்களில் 4 தடவை வந்துள்ள பிரதமர் மோடி நேற்று 5 வது முறையாக மீண்டும் வந்தார். கன்னியாகுமரி அருகே கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். நாடளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளன. இதனால் மோடியின் இந்த பொதுக்கூட்டம் அந்த கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. மேலும், பாஜ தலைமை இதுவரை அறிவித்த 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழகத்தில் போட்டியிடுபவர்களின் யாருடைய பெயர்களும் இடம்பெறவில்லை.
இதனால் மோடி பங்கேற்கு இந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று அந்த கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்தனர். விழா மேடையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் படத்துடன் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோரின் படங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தன. எனவே இவர்கள் வேட்பாளர்களாக இருக்கலாம், அதற்கான குறியீடாக இந்த போஸ்டர் இருக்கலாம் என்று தொண்டர்கள் கருதினர். ஆனால் நடந்தது வேறுவொன்றாக இருந்தது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி, முழுக்க முழுக்க திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மட்டுமே சாடினார். கடைசி வரை தேர்தல் வர இருக்கிறது என்றோ, வாக்களிக்க வேண்டும் என்றோ, கட்சியினர் பாஜ கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றோ வேண்டுகோள் விடுக்கவில்லை.
மேலும் வேட்பாளர்கள் குறித்தும் எதுவும் பேசாதது தொண்டர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது இப்படி பேசி சென்றால் எப்படி? என்று தொண்டர்கள் ஆதங்கப்பட்டனர். மேலும் தொடக்கம் முதல் முடியும் வரை பல இடங்களில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை பல இடங்களில் புகழ்ந்து பேசும் வகையில் உரை தயார் செய்யப்பட்டிருந்ததும் சீனியர்களை கவலையடைய செய்தது. குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலம் ஆகிய திட்டங்களை பட்டியலிட்டபோதும் அவை முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்டது என்பதை குறிப்பிட பிரதமர் தயாராகவில்லை. சூசகமாக கூட கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பற்றி பேசாதது தொண்டர்களை ஏமாற்றம் அடைய செய்தது.