‘‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திடீர் தயக்கம் காட்டும் நிர்வாகி மீது உச்சக்கட்ட டென்சனில் இருக்கிறாராமே சேலத்துக்காரர்’’ என கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் இலைக்கட்சி தீவிரமாக இறங்கியிருக்கிறாம்.. டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தலைமையிடத்தில் சீட்டு கேட்டுவிட வேண்டியதுதான்னு ஆரம்பத்தில் தெரிவித்து வந்த முக்கிய நிர்வாகிங்க பலரும் திடீர்னு தயக்கம் காட்டுகிறாங்களாம்..
இதற்கான காரணம், இலைக்கட்சியுடன் சரியான கூட்டணி அமையாததுதானாம்.. தேர்தலில் போட்டிப் போட்டு தோல்வியடைவதோடு, பணத்தையும் இழக்க நேரிடும் என்பதால் ஒதுங்கி இருப்பதே நல்லதுன்னு முக்கிய நிர்வாகிகளுக்குள்ளே பேசிக்கிறாங்களாம்… நெற்களஞ்சிய மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டி வரும் முக்கிய நிர்வாகி, தனக்கு எம்பி சீட் வேண்டாம். சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏ சீட் கொடுத்தால் போதும்னு அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளாராம்..
இலைக்கட்சியை பொறுத்தவரைக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதே பெரிய விசயமாக இருந்து வரும் இந்த நேரத்தில் தனக்கு எம்பி சீட் வேண்டாம்னு கூறி வரும் முக்கிய நிர்வாகி பற்றி தலைமைக்கு சேலத்துக்காரர் டீம் கொண்டு சென்றுள்ளனர். இந்த தகவல கேட்டதும் சேலத்துக்காரர் அந்த முக்கிய நிர்வாகி மீது உச்சக்கட்ட டென்சனில் இருந்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நடுநிலை நாயகருக்கும் உள்துறைக்கும் இடையே லடாய் ஏற்பட்டு பாஜவில் புகைச்சல் உச்சக்கட்டம் அடைஞ்சிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லி பாஜ தலைமை, இதுவரை 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் புதுவையில் உள்ள ஒரே ஒரு தொகுதிக்கு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. மேலும் இங்கு பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வந்தும், வேட்பாளர் பெயர் அறிவிக்காதது கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்திய ஏற்படுத்தி இருக்கு.. சிட்டிங் ஒன்றிய நிதியமைச்சர், வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என கூறிவந்த நிலையில் அதுதொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகாததால் மாநில அமைச்சர் சிவாயமானவரும் அப்செட்டில் உள்ளாராம்..
கட்சியில் யாரும் இல்லாதபட்சத்தில் தமது பெயரை அறிவித்து விடுவார்களோ என்ற பயத்தில் உள்ளாராம்.. டெல்லி தலைமைக்கு புதுவை மாநில தலைமை மற்றும் நடுநிலைநாயகர் மற்றும் சிலர் தமது பெயரை தொடர்ந்து பரிந்துரை செய்வதால் நடுநிலைநாயகர் மீது ஏகக் கடுப்பில் உள்ளாராம்.. சிவாயமானவரின் துறைக்கு உட்பட்ட அரசு நிகழ்ச்சிக்கு நடுநிலைநாயகரை அழைப்பதே கிடையாதாம்… ஆனால் அவராகவே கலந்துகொள்வதாக கட்சி நிர்வாகிகளிடம் சிவாயமானவர் புலம்பி வருகிறாராம்…
இதை அறியாத நடுநிலைநாயகரும், என்னய்யா போன் போட்டாலே எடுக்க மாட்டங்கிறாய் என விழாவிலேயே கேட்டுபுட்டாராம்.. இதனிடையே இரண்டு முறையாக மலேசியாவுக்கு சிவாயமானவர் சென்றுள்ளார். மலேசியா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் பிசினஸ் வைத்துள்ளதாகவும், அதனால் அவர் அடிக்கடி மலேசியா செல்வதாகவும் எதிர்கட்சியினர் மற்றும் அவரது சொந்த கட்சியில் உள்ள எதிர்கோஷ்டியினர் பல்வேறு விதமாக கிளப்பி விடுகிறார்களாம்..
அதாவது வெளிநாட்டில் செய்த முதலீடுகளின் லாபத்தை எடுத்து வருவதாக சென்று உள்ளதாகவும், மற்றொரு தரப்பினர் உடல்நிலைக்காக செக்கப்புக்காக சென்றதாகவும் கூறுகின்றனர்.. எது எப்படியோ அவர் வந்து எதற்காக சென்றதாக தகவல் கூறினால்தான் உண்மை தெரியவரும்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கள்ளக்கூட்டணியில பேச்சுவார்த்தை ரொம்பவே தீவிரமா இருக்காமே..அதுபற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாடாளுமன்ற தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னே அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தேர்தல் அதிகாரி ஒருத்தர் திடீரென பதவியை ராஜினாமா செஞ்சிட்டாரு.. நல்லாதானே போயிட்டிருந்து ஏன் விலகினாருன்னு எல்லோருக்கும் கேள்வி எழத்தான் செய்யும். ஆனா அதில் பெரிய மர்மம் இருக்குதுன்னு அனைத்து கட்சிகளும் சந்தேகங்களை எழுப்பிக்கிட்டிருக்காங்க.. ஆனால், இதுல புதுப்புது தகவல்கள் வெளியாகிகிட்டே இருக்குது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிஞ்சு வேட்பாளர்கள் தயாராக இருக்காங்க.. ஆனால் ஒன்றியத்தில் ஆளும் பாஜ, இம்முறை வெற்றி பெறுவது என்பது குதிரைக்கொம்பாக இருக்காம்.. வடமாநிலத்தில் அவர்கள் நினைத்தது போல வெற்றி பெறுவது எளிதான காரியம் இல்லையாம்.. அதேபோல சில மாநிலங்களில் கூட்டணி அமைப்பதில் பெரும் இழுபறியாகவே இருக்காம்.. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தனி அணி அமைக்க படுதீவிரமா இருக்காங்க..
இந்த கூட்டணியில மாம்பழம், முரசு ஆகிய கட்சிகளை சேரவிடக்கூடாது என்பதில் உறுதியா இருக்கும் பாஜ, மந்திரி பதவி, மேல்சபை என ஆசைக்காட்டி தன் பக்கம் இழுத்துக்கிட்டிருக்கு.. ஆனால் அந்த ரெண்டு கட்சிகளும் பாஜ பக்கம் போனால் கட்சி காணாமல் போய்விடும் என்பதை உணர்ந்திருக்குது. என்றாலும் அவர்களுக்கு கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதுபோல இருக்காங்க.. இந்த நிலையில் மாம்பழம் அதன்முடிவை வெளிப்படையாகவே அறிவிக்க மறுத்துக்கிட்டிருக்காங்க..
என்றாலும் யாரும் எதிர்பார்க்காத முடிவை அய்யா எடுப்பாருன்னு அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சொல்றாங்க. தலைகீழாக நின்றாலும் மக்கள் ஆதரவோடு திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்கமுடியாது என்பதை தெரிந்து கொண்டதோடு, மீண்டும் அதிமுக தலைமையில் மெகா கூட்டணியை கொண்டுவரவேண்டும் என்ற அரிய பணியை மாம்பழ கட்சியிடம் ஒப்படைச்சிருக்காங்களாம்.. இதனால இலைக்கட்சி தலைவரோடு மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருதாம்..
எங்களுக்கு ஐந்து தொகுதி கொடுத்தால் கூட ஏத்துக்கிறோம், ஆனா எல்லோரும் ஒன்றாக இணைவோமுன்னு பேச்சு தொடங்கியிருக்காம்.. இதைத்தான் கள்ளக்கூட்டணின்னு சொல்லியிருக்காங்க.. எப்படியாவது தமிழ்நாட்டில் ஒரு 10 இடத்தையாவது பிடிச்சிடனுமுன்னு ஒன்றிய பாஜ தீவிரமா இருக்காம்.. இந்த பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால், தேர்தல் அதிகாரியை வெளியேத்தி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருது.
அதே போல வடமாநிலங்களிலும் கூட்டணி இழுபறியாகவே இருக்காம்.. இந்த கூட்டணியை ஒன்றிணைத்துவிட்டால் கேட்ட எல்லாம் கிடைப்பதுடன், மெடிக்கல் கல்லூரிக்கு அனுமதியும் வழங்கப்படும்னு உறுதி கூறப்பட்டிருக்காம்.. இதனால கூட்டணி பற்றி வாய் திறக்காமலேயே கீழ்மட்டவேலை நடந்துக்கிட்டிருப்பதாக கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.