நமது இந்திய நாடு 18வது நாடாளுமன்றத் தேர்தலை இன்னும் சில வாரங்களில் சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தைகளும், தொகுதி பங்கீடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது. தேர்தல் ஆணையமும் ஓரிரு நாட்களில் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளில் துரிதமாக உள்ளது. இவை அனைத்தும் ஒரு புறம் இருந்தாலும் பொதுமக்களின் வாக்குகளை அரசியல் கட்சிகளுக்கு அறுவடை செய்து கொடுப்பது அவர்கள் கொடுக்கும் நம்பகமான வாக்குறுதிகள்தான். இந்தவகையில் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள வாக்குறுதிகள் தேர்தல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
காங்கிரஸ் கட்சியானது ‘நீதி’ என்ற பெயரில் தனது தேர்தல் அறிக்கையை வடிவமைத்துள்ளது. இதில் இளைஞர்களுக்கான நீதி, பெண்களுக்கான நீதி, விவசாயிகளுக்கான நீதி என்று ஒவ்வொரு பிரிவினருக்கும் பிரதானமாக 5 வாக்குறுதிகளை முன்வைத்து அறிவித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகளிர் மாநாடு சமீபத்தில் நடந்தது. இதில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெண்களுக்கான 5 உத்தரவாதங்கள் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஏழைப்பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஒன்றிய அரசு வேலைகளில் புதிய ஆட்சேர்ப்பில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். உழைப்புக்கேற்ற ஊதியம் திட்டத்தின் கீழ் ஆஷா, அங்கன்வாடி மற்றும் மதிய உணவுத்திட்ட பெண் ஊழியர்களுக்காக ஒன்றிய பட்ஜெட்டில் நிதி இருமடங்காக உயர்த்தப்படும். பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் வழக்குகளை எதிர்த்து போராடுவது குறித்து வழிகாட்டுவதற்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு துணை ஆலோசகர் நியமிக்கப்படுவார்.
சாவித்திரிபாய் பூலே விடுதி திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசில் பணியாற்றும் பெண்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் விடுதிகள் கட்டப்படும். இந்த விடுதிகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் இரட்டிப்பாக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பானது ஒட்டுமொத்த மகளிர் மனங்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இதேபோல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க 30 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். போட்டித்தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவது தடுக்கப்படும். அரசு பணியாளர் தேர்வாணையம் சீர்திருத்தப்படும். அவுட்சோர்சிங் முறை ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதிகளும் வரவேற்பை பெற்றுள்ளது.
விவசாயிகளுக்கு பயிர் பாதிப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்க சட்டம் இயற்றப்படும். விவசாயத்திற்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆய்வு நடத்தப்படும். வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது விவசாயிகள் மனதில் மகிழ்ச்சியை விதைத்துள்ளது.
இந்தநேரத்தில் வாக்குறுதிகளை எந்த கட்சி அளிக்கிறது? அந்த வாக்குறுதிகளை சாத்தியப்படுத்துவதற்கு அது தகுதியுள்ள கட்சியா? ஏற்கனவே கொடுத்து ஏமாற்றிய கட்சியா? என்ற பொதுமக்களின் ஒப்பீடும் இங்கே முக்கியமானது. தேசத்திற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள்தான், நாட்டின் நவீன வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது என்பதை மறுக்கவும், மறைக்கவும் முடியாது. அந்தவகையில் வாகை சூடினால் இந்த வாக்குறுதிகளையும் திட்டமாக செயல்படுத்தும் தனித்திறன் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்கின்றனர் அரசியல்நோக்கர்கள்.