திண்டுக்கல்: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பஞ்சாமிர்தம் குறித்து பொய் அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோயில் நிராவகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்;
உலகப்புகழ் பெற்ற பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பஞ்சாமிர்தங்களை ஊடகங்களில் கெட்டுப்போன பஞ்சாமிர்தத்தை பக்தர்களுக்கு விற்கிறார்கள் என்று தொடர்ந்து அவதூறுகளை பரப்பி அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் யாரையும் பழநி திருக்கோயில் பஞ்சாமிர்தம் வாங்காத நிலையை ஏற்படுத்தி திருக்கோயில் நிர்வாகம் தானாகவே பஞ்சாமிர்தம் விற்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற தீய உள்நோக்கத்திலும் பொது மக்களை அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற தீய உள் நோக்கத்திலும் தங்களுடைய குடும்ப பஞ்சாமிர்தம் வியாபரம் மட்டுமே நடைபெற வேண்டும் என்ற தீய உள்நோக்கத்திலும் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக ஊடகங்களில் பொய்யாக அவதூறுகளை பரப்பிய பழநி நகர் விஷ்வ ஹிந்து பரிசித் அமைப்பை சேர்ந்த 1)செந்தில்குமார், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 2)பாலன், 3)அஜித், 4)பத்மநாபன், 5)ராஜா, 6)பரணி பி.ஜே.பி. அமைப்பைச் சேர்ந்த 7)குணா, 8)வெங்கடேஷ், 9)செல்வகுமார் ஆகிய நபர்கள் மீது பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 143, 341 மற்றும் 353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை எண்.70/2024 பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
பல கோடிக்கணக்கான பக்தர்கள் திருக்கோயில் பஞ்சாமிர்தத்தை வாங்கி சாப்பிட்டும் ஒருவர் கூட உடல்நலம் பாதித்ததாக வரலாறு இல்லை. இது மருத்துவ குணமிக்க பிரசாதமாகவே வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பக்தர்கள் யாரும் முருகப்பெருமானின் அருள்பிரசாதமான பஞ்சாமிர்தத்தை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையே என்று கவலைபட வேண்டாம் என்று திருக்கோயில் நிர்வாகம் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட விவரத்தினை பத்திரிக்கை செய்தியாக வெளியிட வேண்டும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.