செங்கம்: பாஜ நிர்வாகி சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான நண்பர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரம் கோயில் கொள்ளை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(27), பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி. இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான காசி, ஜெயராமன் உட்பட 8 பேர் வனவிலங்குகளை வேட்டையாட கடந்த 8ம் தேதி இரவு ஜவ்வாதுமலை வனப்பகுதிக்கு சென்றவர்கள் மாயமாகினர். அவர்களை நேற்று முன்தினம் போலீசார் தேடி சென்றுபோது திருப்பத்தூர் வனப்பகுதியை ஒட்டிய மீன்மடுவு பகுதியில் உடலில் குண்டு காயங்களுடன் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஏழுமலையின் சடலத்தை மீட்டனர். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் அவருடன் சென்ற காசி, ஜெயராமன் உளிட்ட 7 பேர் மற்றும் அவர்களது செல்போன் குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் விழுப்புரம் பகுதியில் பதுங்கி இருந்த காசியை (58) நேற்று மாலை தனிப்படை போலீசார் கைது செய்து செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.