பாலக்காடு : திருத்தாலாவை அடுத்த ஆலூர் பகவதி அம்மன் கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் பெண் பக்தையின் தங்கச்சங்கிலியை திருடிய தமிழகத்தை சேர்ந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். பாலக்காடு மாவட்டம், திருத்தாலாவை அடுத்த ஆலூர் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. இந்த விழாவில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இந்த நெரிசலில் ஆலூரை சேர்ந்த சுகன்யா என்ற பெண் பக்தையின் தங்கச்சங்கிலி திருட்டு போனது.
உடனடியாக அங்கிருந்த போலீசாரிடம், உறவினர்களிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சந்தேகப்படும்படியாக திரிந்த 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து, விசாரணையில் தமிழ்நாட்டில் உள்ள சின்ன சேலத்தை சேர்ந்த வெள்ளங்கரி (26), ரேவதி (32) என்பதும், இருவரும் இதுபோன்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற விழாக்களிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது. தொடர்ந்து, இருவரையும் திருத்தாலா போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.