ஈரோடு : வைப்பு நிதி பத்திரங்களை 17 மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று வழங்கினார்.தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை மேம்பாட்டு வசதி நிறுவனத்தின் மூலமாக வருவாய் ஈட்டும் தாய், தந்தையர் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வைப்பு நிதி பத்திரங்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி, ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் வட்டாரங்களைச் சார்ந்த 17 மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வைப்பு நிதி பத்திரங்களை வழங்கினார். தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் இருந்து அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பள்ளி மேம்பாட்டுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச்சான்றிதழ், கேடயம் பெற்ற பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், என்.கந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் பேராசிரியர் அன்பழகனார் விருது, பள்ளி மேம்பாட்டுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச்சான்றிதழ், கேடயம் பெற்ற வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றின் தலைமையாசிரியர்கள், விருதுகளை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் சுகுமார் (ஈரோடு), திருநாவுக்கரசு (கோபி செட்டிபாளையம்-தொடக்கக்கல்வி) ஆகியோர் கலந்து கொண்டனர்.