சென்னை: சிஏஏ சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2019ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கக்கூடிய இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அரசாணை பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில் சுமார் 5,500 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வகையில் அமைச்சருக்கு எதிரான இந்த வழக்கை விசாரிப்பதில் எந்த பலனும் இல்லை என கூறி, வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.