துரைப்பாக்கம்: நீலாங்கரை ராஜா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நீலாங்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட வீட்டை நீலாங்கரை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 2 கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் வெட்டுவாங்கனியை சேர்ந்த சையது (30), கணேஷ்குமார் (22) கானத்தூரை சேர்ந்த ரமேஷ் (29) என்றும் இவர்கள் நீலாங்கரை ராஜா நகர் பகுதி வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா பதுக்கி வைத்து அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.