சென்னை: பாமகவும், தேமுதிகவும் அதிமுக கூட்டணிக்குச் செல்ல முடிவு எடுத்துள்ளதால் தொண்டர்களே இல்லாமல் தலைவர்கள் மட்டுமே உள்ள கட்சிகளுக்கு தலா ஒரு சீட் கொடுத்து அவர்களுடன் தேர்தலை பாஜ சந்திக்கிறது. அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் சேருவது உறுதியாகிவிட்டது. தமிழகத்தில் பாஜவுக்கு பெரிய அளவில் தொண்டர்கள் பலம் இல்லாததால், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் பலத்தின் மூலம்தான் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் பெரிய அளவில் கோரிக்கை வைத்து நிறைவேறாததால் அதிமுக கூட்டணியில் சேர முடிவு செய்து விட்டனர். இதனால் தலைவர்கள் மட்டுமே உள்ள கட்சிகளுடன் கூட்டணியை இறுதி செய்யத் தொடங்கிவிட்டனர். அதில் 3 எழுத்து பெயர் கொண்ட ஓபிஎஸ், டிடிவி, ஏசிஎஸ் ஆகியோருடன் 3 எழுத்தான பாஜக கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. 3 எழுத்து பெயர் கொண்ட தலைவர்கள் செல்வாக்கானவர்களாக இருந்தாலும், அவர்கள் பின்னால் பெரிய தொண்டர் படை கிடையாது. அதேபோல, பெயருக்கு இருக்கும் செல்வாக்கு, கட்சிக்கு கிடையாது என்ற நிலைதான் உள்ளது. இவர்களோடு, ஐஜேகே (இந்திய ஜனநாயக கட்சி) என்ற 3 எழுத்து கட்சியும் கூட்டணி வைத்துள்ளது. இதனால் பாஜ கூட்டணி ஒரே 3 எழுத்துக்களின் சங்கமமாகத்தான் உள்ளது.