கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே பாழடைந்த கிணற்று தண்ணீரில் மூழ்கி வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். பொத்தேரி அடுத்த காட்டாங்கொளத்தூர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு மனைவி சூர்யா(39), மகன் முகேஷ் (26) ஆகியோர் உள்ளனர். இதில் முகேஷ்கும், அதே பகுதியை சேர்ந்த சௌமியா (21) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
இதில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சௌமியா அவரது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முகேஷ், அதே பகுதியை சேர்ந்த நரேன், சின்னமணி மற்றும் 2 வாலிபர் உட்பட 5 பேர் நேற்று மதியம் குடிபோதையில் கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள பாழடைந்த கிணற்றின் அருகே காரில் சென்றுள்ளனர். பின்னர் அந்த கிணற்றில் குளித்ததாக கூறப்படுகிறது.
இதில் தண்ணீரில் மூழ்கிய முகேஷ் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனை கண்டதும் உடனிருந்த 2 வாலிபர்கள் காரை எடுத்துகொண்டு தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில், மற்ற 2 பேர் அங்கேயே குடிபோதையில் தள்ளாடியபடி இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காயார் போலீசார் மற்றும் மறைமலை நகரில் உள்ள தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரமாக போராடி முகேசின் சடலத்தை மீட்டனர்.
பின்னர், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து முகேஷ் நண்பர்களான நரேன், சின்னமணி ஆகியோரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.