சென்னை: கடந்த பிப்.19ம் தேதி நடைபெற்ற 2024-25ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்த்ப்டரில் தமிழ்நாட்டில் கிராமங்களுக்கும் தரமான போக்குவரத்து சேவைகளை தொடர்ந்து வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந் நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதுமட்டுமின்றி ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக 3,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டரை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. இதில் 1190 மாநகர பேருந்துகள், 672 மாநகர தாழ்தள பேருந்து, 1,138 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 3000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக அடுத்த நிதியாண்டில் புதிய பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகம் முழுவதும் புதிய பேருந்துகள் சாலையில் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.