கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒன்றியம் மசினகுடி ஊராட்சி மாயார் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நாகராஜ் (55). இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். நாகராஜ் தனது விவசாய தோட்டத்தில் நேற்று இரவு தோட்டத்தில் காவலில் ஈடுபட்டிருந்தார். அதிகாலை சுமார் 4 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, எதிர்பாராத விதமாக நாகராஜை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர், நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவர் சோலை தனியார் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்தவர் மாதேவ் (52). இவர் எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளார். சர்க்கார் மூலை டாங்க்மேடு பகுதியில் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக வெளியில் வந்த காட்டு யானை எதிர்பாராதவிதமாக மாதேவை தாக்கியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.