ஊட்டி : சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஊட்டி வாலிபருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஊட்டி அருகே தலைகுந்தா காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (23). இவர் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், இதனை வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை மிரட்டி வந்துள்ளார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுப்பது குறித்து பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, அவர்கள் ஊட்டி புதுமந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அஜித் தொடர்ந்து சிறுமிக்கு அச்சுறுத்தல் இருக்க கூடும் என்பதால், அப்போது அஜித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீனில் வெளியே வந்த அஜித் மீண்டும் கடந்த ஜனவரி மாதம் தலைக்குந்தா பகுதியில் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால், மீண்டும் கைது செய்யப்பட்டு தற்போது கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அஜித்திற்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்து விடுவதாக மிரட்டியதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை என மொத்தம் 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பு அளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.