ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ரூ.5000 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதி ரத்து செய்த ஒன்றிய அரசு அதனை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமாக பிரித்தது. ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி நேற்று ஜம்மு காஷ்மீருக்கு வருகை புரிந்தார்.
ஜம்மு காஷ்மீரில் விவசாய பொருளாதாரத்தை உயர்த்தவதற்காக ரூ.5000கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். பின்னர் பேரணியில்பிரதமர் மோடி பேசுகையில், ‘‘சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியின் புதிய உச்சங்களை தொடுகின்றது. ஸ்ரீநகரின் அற்புதமான மனிதர்களில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்”என்றார்.
* தேனீ வளர்க்கும் இளைஞருடன் செல்பி
ஜம்மு காஷ்மீர் சென்ற பிரதமர் மோடியுடன் குறிப்பிட்ட துறைகளில் சாதனை படைத்த இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தேனீ வளர்ப்பில் ஈடுபட்ட நசீம் நாசர் என்ற இளைஞருடன் பிரதமர் மோடி செல்பி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‘‘எனது நண்பர் நசீமுடன் மறக்கமுடியாத செல்பி. அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.