கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் நேற்று பாஜ கட்சியில் இணைந்தார். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் அபிஜித் கங்கோபாத்யாய். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த 5ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் பாஜவில் இணைய உள்ளதாக கூறினார்.
இந்நிலையில் நேற்று கொல்கத்தா சால்ட் லேக்கில் உள்ள பாஜ தலைமை அலுவலகம் சென்ற அபிஜித் கங்கோபாத்யாய், பாஜவில் இணைந்தார். பாஜவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித், “நான் தற்போது ஒரு புதிய களத்தில் சேர்ந்துள்ளேன். பாஜவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில் ஒரு போர் வீரனை போல் பணியாற்றுவேன். ஊழல் நிறைந்த திரிணாமுல் காங்கிரஸ் அரசை மேற்கு வங்கத்தில் இருந்து அகற்றுவதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்தார்.
* எங்கு போட்டியிட்டாலும் தோற்கடிப்போம்:மம்தா
பாஜகவில் இணைந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பற்றி மம்தாபானர்ஜி குறிப்பிடுகையில், ‘நீங்கள் மக்களவைத் தேர்தலில் எங்கிருந்து போட்டியிட்டாலும் உங்கள் தோல்வியை நாங்கள் உறுதி செய்வோம். உங்கள் தீர்ப்புகள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைகளை பறித்ததற்காக, இளைஞர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். உங்கள் தீர்ப்புகள் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன’ என்றார்.