சென்னை : தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் மின்னகம், மின் நுகர்வோர் சேவை மையம் வாயிலாக பயனாளிகளை தொடர்பு கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க “நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், இன்று (06.03.2024) சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் மின்னகம், மின் நுகர்வோர் சேவை மையம் வாயிலாக பயனாளிகளை தொடர்பு கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் பொது மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் வழங்கப்பட்டு வரும் சேவைகள் உரிய முறையில் அவர்களிடம் சென்றடைந்துள்ளதா என்பது கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் இலவச விவசாய மின் இணைப்பு சேவை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெறுதல், மக்களுடன் முதல்வர் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது வழங்கப்பட்ட சேவைகள், மின் இணைப்புகளில் நுகர்வோர் பெயர் மாற்ற சேவை, குறைந்த மின் அழுத்தத்தினை சரி செய்தல் மற்றும் உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதை மாற்றம் உள்ளிட்ட சேவைகளின் மூலம் பயனடைந்த வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐந்து பயனாளிகளிடம் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்த கருத்துக்களை அமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார். பயனாளிகள் அனைவரும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனு சம்ர்ப்பிக்கப்பட்ட அன்றே, மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக சேவைகள் வழங்கப்பட்டமைக்காக முதலமைச்சர் அவர்களுக்கும். அமைச்சர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்தனர்.