புதுச்சேரி: புதுச்சேரியில் சந்திர பிரியங்கா டிஸ்மிச் செய்யப்பட்ட நிலையில், புதிய அமைச்சராக திருமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ்- பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காரைக்கால், நெடுங்காடு (தனி) தொகுதி எம்எல்ஏ சந்திரபிரியங்கா (33) மீது துறை ரீதியாக புகார்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை புகாரால் கடந்த அக்டோபர் 10ம்தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய அமைச்சராக உடனடியாக நியமிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பட்டியலில் காரைக்கால் எம்எல்ஏ திருமுருகன் உள்பட பல்வேறு பெயர்கள் அடிபட்டன.
எந்தவொரு முக்கிய முடிவாக இருந்தாலும் சேலம் அப்பா பைத்தியசாமி கோயில் மற்றும் அழுக்கு சாமியாரிடம் உத்தரவு கேட்பார். அந்தவகையில் இரண்டு தடவை, அந்த கோயில்களுக்கு சென்று புதிய அமைச்சராக யாரை நியமிப்பது என சுவாமியிடம் உத்தரவு கேட்டு வந்தார். அதன்படி, புதிய அமைச்சராக திருமுருகனை நியமிக்க முதல்வர் ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில் புதுச்சேரி அமைச்சராக திருமுருகனை நியமிக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அமைச்சராக இருந்த சந்திரபிரியங்கா நீக்கப்பட்ட பிறகு கடந்த 5 மாதங்களாக அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தது. இந்நிலையில் காரைக்கால் பிராந்திய பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் நாளை காலை 11 மணியளவில் புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொள்வார் என்று தெரிகிறது.