திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் ஜெய்க்கர் பிரபு, மாவட்ட பொருளாளர் முனுசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஏ.செந்தில்குமார், வசந்தி, செந்தில் முருகன், மாவட்ட இணை செயலாளர்கள் விஜய் ஆனந்த், கஜேந்திரன், யுகேந்தர் மத்திய செயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் ஏ.மணிகண்டன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இவர்கள் இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருபாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை வெளியிட வேண்டும், பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் இந்த போராட்டம் தொடர்ந்தது. அப்போது அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து இரவும், பகலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.