மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிக பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை அடர்த்தியான கடும் பனிப்பொழிவு நிலவியது. இதன் காரணமாக நேற்று காலையில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றது. காலை நேரத்தில் நடை பயிற்சி செய்யும் பலரும் அதிக பனி காரணமாக வெளியில் செல்வதை தவிர்த்தனர். மேலும், இந்த அதிகப்படியான பனிப்பொழிவின் காரணமாக பலருக்கும் உடல் நல பாதிப்புகளும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. விவசாயிகளின் பல்வேறு வகையான பயிர் வகைகளும் இந்த பனிப்பொழிவினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். நேற்று இப்பகுதியில் காலை 9 மணி வரை பனிப்பொழிவு நீடித்தது குறிப்பிடத்தக்கது.