டெல்லி: டெல்லியில் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை திமுக அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் தமிழ்நாட்டை பின்பற்றி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி சட்டசபையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில நிதியமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார். அப்போது; ஆம் ஆத்மி தலைமையிலான அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் என அறிவித்தார். முக்யம்நாத்ரி மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேலான அனைத்து பெண்களுக்கும் டெல்லி அரசு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் என்று கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்; மொத்தம் 76,000 கோடி செலவில் டெல்லி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கல்வித் துறைக்கு 16,396 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய பள்ளிகள் கட்ட ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள வகுப்பறைகளை பராமரிக்க ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் நல்ல வசதிகளை பராமரிக்க ரூ.6,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்க ரூ.194 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆம்ஆத்மி அரசின் கிளினிக்குகள் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்க ரூ.212 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவமனைகள் கட்டுதல் மற்றும் ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை பராமரிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.