மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ரூ.114 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு பொறுப்பேற்ற திமுக அரசு, மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சி பணிக்காக பல்வேறு திட்ட பணிகளை துவங்கி வைத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 2021ம் ஆண்டு மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஊராட்சியில், ரூ.114.48 கோடி மதிப்பில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுமான பணிகள் நிறைவுற்று இன்று திறக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 7 மாடி கட்டிடத்துடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. மன்னம்பந்தல் அருகே மூங்கில் தோட்டத்தில் ரூ.115 கோடியில் கட்டிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
முதலமைச்சருடன் அமைச்சர்கள் ரகுபதி, கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஏ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதன் பின்பு, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 12,653 பயனாளிகளுக்கு ரூ.655.44 கோடி நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார். முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகங்களை வழங்கி அமைச்சர் ஏ.வ. வேலு உள்ளிட்டோர் வரவேற்றனர்.