‘‘லோன் வாங்கி தர்றேன்னு சொல்லி வசூலில் தாமரை ேலடி இறங்கியிருக்கிறாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல மரத்தூர் என்று முடியுற ஹில்ஸ் ஏரியாவுல, தாமரை பார்ட்டிக்காரங்க இருக்காங்க. அந்த ஏரியாவுல லேடி ஒருத்தங்க பொறுப்புல இருக்காங்களாம். சமூகத்துக்கும் சேவை செய்றதாக சொல்றாங்க. அவங்க, ஒன்றிய அரசு 1 எல் லோன் உதவி வழங்குறாங்கன்னு சொல்லி, அதுக்கு இன்டர்நெட் செலவு 4கே வரை வசூல் செய்து வர்றாராம். இப்படி டெய்லி 200க்கும் அதிகமான ஜனங்க அந்த ஏரியாவுல கூடிடுறாங்களாம். இது காக்கிகளுக்கு புகாராக போச்சாம். காக்கிகள் நடவடிக்கையால, இப்ப அந்த லேடி வேற ஒரு இடத்துல இந்த வேலைய தொடங்கியிருக்காங்களாம். 1 எல் தர்றது யாரு, எப்போ வரும்னு யாருக்கும் தெரியலையாம். ஆனா, ஜனங்களும் அந்த லேடி சொல்றதை நம்பி, இன்டர்நெட் செலவுக்கு 4 கே கொடுத்துட்டு போறாங்களாம். இதனால, அந்த மரத்தூர் ஹில்ஸ் ஏரியாவுல விசாரணைய தொடங்கி, நடவடிக்கை எடுக்கணும்னு விஷயம் தெரிஞ்சவங்க சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஓவரா வேணாம், கொஞ்சம் அடக்கிவாசிங்கன்னு தலைமை உத்தரவு போட்டிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இலைக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், தாமரை கட்சியின் முக்கிய பிரமுகர்களை எல்லாம், பொதுக்கூட்டங்களில், பேட்டிகளில் பொளந்து கட்டி வருகின்றனர். அதிலும் தூங்காநகர் மாஜி அமைச்சரொருவர், தலைமைக்கு எப்போதுமே ஓவர் விசுவாசம் காட்டக்கூடியவர், வழக்கத்தை விட ஓவர் கோபத்தை கொட்டி தீர்த்தார். ‘உனக்கு நான் சளைச்சவர் அல்ல..’ என்பது போல ஒருவர் மாற்றி ஒருவர் பேசி வந்தனர். பேச்சு எல்லை மீறிப்போவதை கண்ட இலைக்கட்சி தலைமை தரப்பில் இருந்து, ‘ரொம்ப ஓவரா பேசாதீங்க… கொஞ்சம் மரியாதையோடு பேசவும்… அடக்கி வாசிக்கவும்’ என உத்தரவு போட்டுள்ளதாம். ‘முன்பெல்லாம் தலைமை, எங்களை பேச விட்டு அமைதி காக்கும். தற்போது திடீரென அமைதி காக்குமாறு கூறுகிறதே… ஒருவேளை கூட்டணி காத்து வீச ஆரம்பிக்குதோ…? ஏற்கனவே, முன்னாள் மீன்வளத்துறை மாஜி அமைச்சர், அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல. எதுவும், எப்போதும் மாறலாம் என சூசகமாக பேசினார். அதன் அர்த்தம் இதுதானோ? எம்பி தேர்தலில் தாமரைக்கட்சியை விமர்சித்தால்தானே கொஞ்சமாவது ஓட்டு தேறும்’ என பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பி வருகின்றனர் இலைக்கட்சி மாஜி மந்திரிகள்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடலூர் மாவட்ட இலைக்கட்சியில் கோஷ்டி பூசல் உச்சத்துக்கு போய்விட்டதோ..’’
‘‘கடலூர் மாவட்ட இலைக்கட்சி உட்கட்சி பூசல் பூதகாரமாத்தான் வெடிச்சிருக்கு. கடலூர் மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு என 4 மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்காங்க. இதில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பத்துக்கு எதிராக மாஜி எம்எல்ஏ பன்னீர் கோஷ்டி போர்க்கொடி தூக்கி உள்ளது. சமீபத்தில் மாஜி எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதற்கு காரணமே மாஜி அமைச்சர் தான். மாஜி எம்எல்ஏவின் சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கொடுத்ததே அந்த தரப்பு தான் என தலைமைக்கு பரபரப்பு புகார் கடிதம் அனுப்பி உள்ளது. அதற்கு போட்டியாக மாஜி அமைச்சர் தரப்பும் தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கடந்த சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் கடலூர் தொகுதியில் நின்ற போது எனது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது மாஜி எம்எல்ஏ தரப்பு கொடுத்த லிஸ்ட்படி தான் என கூறியுள்ளது. இவர்களது கோஷ்டி சண்டையால் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என குழப்பத்தில் உள்ளதாம் தலைமை. இதற்கிடையில் சமீபத்தில் நெய்வேலியில் தலைவி சிலை திறப்பு காரணமாக மற்றொரு மாவட்ட செயலாளர் சொரத்தூர் அணியில் உள்ள மாஜி எம்எல்ஏக்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட் வழங்கப்படும் என உள்ளூர் கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். மாஜி அமைச்சருக்கு எதிராக மாஜி எம்எல்ஏ போர்க்கொடி தூக்கி இருப்பது கடலூர் மாவட்ட கட்சியில் பெரும் கொதிப்பையே ஏற்படுத்திடுச்சின்னு ரத்தத்தின் ரத்தங்களே சொல்லுதாம்..’’ என்று விவரித்தார் விக்கியானந்தா.
‘‘பெருத்த ஏமாற்றத்தில் இருக்காராமே பொன்னார்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘உண்மைதான், தாமரை கட்சியில் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. எல்லா முறையும் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்னரே நம்பிக்கையுடன் கடைக்கோடி தொகுதியில் பொன்னானவர் தேர்தல் பணிகளை தொடங்கி விடுவார். அதற்கேற்ப வேட்பாளர் பட்டியலிலும் அவரது பெயர் தாமதமின்றி இடம்பெற்றுவிடும். இந்த முறை நிலைமை தலைகீழாக உள்ளது. 10 வது முறையாக மக்களவை தேர்தலில் களம் காண அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் தாமரை கட்சியில் முதல் பட்டியலில் தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் எவரது பெயரும் இடம்பெறவில்லை. கூட்டணி இழுபறிதான் காரணம் என்றாலும் எந்த கூட்டணியிலும் இதுவரை தென்கோடி தொகுதி தாமரைக்கட்சிக்கே ஒதுக்கப்பட்டதால் தனது ெபயர் எப்படியும் பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்த்து இருந்த பொன்னானவர் தரப்புக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.