சென்னை: சென்னை தங்க சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு மைய அச்சகத்தில், எழுது பொருள் மற்றும் அச்சு துறைக்காக ரூ.2.16 கோடி மதிப்பில் தெர்மல் சிடிபி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனை, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தனர். பின்னர், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘2023-24ம் ஆண்டு மானிய கோரிக்கையில் எழுது பொருள் அச்சுத்துறை சார்பில் ரூ.2.16 கோடியில் தெர்மல் சிடிபி இயந்திரம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி இன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. எழுதுபொருள் அச்சுத்துறையில் இது ஒரு மைல்கல்லாக அமையும். இதேபோல், பணியாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டும் பணிகள் மேற்க்கொள்ளப்படுகிறது. அச்சுப்பணிகள் விரைவாக மேற்கொள்ள அரசுக்கு இது பயனுள்ளதாக அமையும். தேவநேய பாவாணர் பெயரில் சென்னையில் நூலகம் உள்ளது. அவர் பிறந்த ஊரான தென்காசியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி பரிசீலனை செய்து அமைக்கப்படும். இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபத்தில் அவரது அடைமொழி இல்லாமல் உள்ளது. அது முதல்வர் அனுமதியோடு சரி செய்யப்படும்,’’ என்றார். நிகழ்ச்சியில் செய்தி துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.