சென்னை: திமுக சார்பில் தமிழ்நாடு அரசின் 2024-25க்கான பட்ஜெட்டின் சிறப்பு அம்சம்களை இல்லந்தோறும் கொண்டு சேர்க்கவும், ஒன்றிய அரசின் மூலமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து கொடுத்து வரும் வேதனைகளையும் ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் கடந்த 26ம் தேதி முதல் பாகம் வாரியாக வீடு வீடாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து திண்ணைப் பிரசாரத்தை நிர்வாகிகள், பூத் கமிட்டியினர், சார்பு அணிகளைச் சார்ந்தோர் என அனைவரும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை தொடர்ந்து ‘எல்லோருக்கும் எல்லாம்’ பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன. அதாவது திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக திமுக அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை விளக்கும் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது மார்ச் 2, 3 மற்றும் 4 ஆகிய 3 நாட்கள் இந்த ‘எல்லோருக்கும் எல்லாம்’ பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது.
அதன்படி முதல் நாளான நேற்று தமிழ்நாடு முழுவதும் மாநகரம், நகரங்கள் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. திருவெறும்பூர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாநகரத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, ஈரோடு துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, நாகப்பட்டினம் நகரம்- எ.வ.வேலு, மதுரை மாநகரம்- தயாநிதி மாறன் எம்பி பங்கேற்றனர். இதேபோல மற்ற இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் திமுக முன்னணியினர் சிறப்புரையாற்றினர்.