புதுடெல்லி: மக்களவை தேர்தலில் போட்டியிடும் 16 மாநிலங்களுக்கான 116 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜ வரும் 10ம் தேதிக்குள் வௌியிட உள்ளது. மோடி தலைமையிலான தற்போதைய பாஜ அரசின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பாஜ 116 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் வௌியிட உள்ளது.
முதற்கட்ட வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து பாஜ தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் இரவு பாஜ மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. 5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், அசாம், சட்டீஸ்கர், டெல்லி, கோவா உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
முதல் பட்டியலில் வாரணாசி தொகுதியில் மீண்டும் பிரதமர் மோடியும், குஜராத் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷாவும், லக்னோவில் ராஜ்நாத் சிங்கும் போட்டியிடுவது குறித்த அறிவிப்பு வௌியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்றிய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், பூபேந்தர் யாதவ், மன்சுக் மாண்டவியா, தர்மேந்திர பிரதான், ஜோதிராதித்ய சிந்தியா, பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோரை களமிறக்கவும் பாஜ திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு எதிராக ராஜீவ் சந்திரசேகர் நிறுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பாகவே வரும் 10ம் தேதிக்குள் முதல் வேட்பாளர் பட்டியலை வௌியிட பாஜ திட்டமிட்டுள்ளது.